அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து உத்தரபிரதேச அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
லக்னோ,
வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக கருதும் ‘அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தை’ (எஸ்மா) உத்தரபிரதேச அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமல்படுத்தியது. பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்த இச்சட்டத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்தது. இந்த நிலையில், இதை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மாநகராட்சிகள், உள்ளாட்சிகள் உள்பட அனைத்து அரசுத்துறைகளிலும் வேலை நிறுத்தத்துக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. வேலைநிறுத்தத்தை தூண்டி விடுபவருக்கு ஓராண்டுவரை சிறைத்தண்டனையோ, ரூ.1,000 வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். சட்ட விதிகளை மீறுபவர்களை வாரண்ட் இல்லாமல் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.