தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
குவெட்டா,
பாகிஸ்தானில் குவெட்டா நகர புறநகர் பகுதியான கில்லி அக்பர்க் பகுதியில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. அந்தத் தகவல்கள், பயங்கரவாத தடுப்பு படையுடன் பகிரப்பட்டன.
அதையடுத்து நேற்று முன்தினம் பயங்கரவாத தடுப்பு படையினர், தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியை அதிரடியாக சுற்றிவளைத்தனர். இதையறிந்ததும், அவர்களை நோக்கி தலீபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
உடனே பயங்கரவாத தடுப்பு படையினரும் தங்கள் துப்பாக்கிகளால் சரியான பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதன் முடிவில் தலீபான் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் அந்த அமைப்பின் தளபதியதன ரியாஸ் தெகேதர் என தகவல்கள் கூறுகின்றன.
குவெட்டா சிவில் ஆஸ்பத்திரியில் 2016-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் வக்கீல்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதில் ரியாஸ் தெகேதருக்கு முக்கிய பங்கு உண்டு என்று அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.