காய்கறி போன்று மளிகைப் பொருட்களும் வாகனங்களில் விற்க அனுமதி மேலும் ஒரு வாரம் தளர்வு இல்லா ஊரடங்கு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Spread the love

கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வு இல்லா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறி போன்று மளிகைப் பொருட் களையும் வாகனங்களில் கொண்டு வந்து விற்க அனுமதிக்கப்படுகிறது.


சென்னை,

கொரோனாபரவலை தடுக்க பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த10-ந் தேதி முதல்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தளர்வு இல்லை

எனினும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

 

அதன்படி தற்போது காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி-மீன் கடைகள், பேக்கரி போன்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்று காய்கறிகள் வாகனங்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது..

மருத்துவ நிபுணர்கள்

தமிழகத்தில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 6 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என்று கலெக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து முன் வைத்து வந்தனர்.

ஒரு வாரம் நீட்டிப்பு

இந்தநிலையில் தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலையில் அறிவிப்பு வெளியிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 22-ந் தேதி அன்று அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவர்கள் தெரிவித்தகருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும், ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு வரும் 31-ந் தேதி காலை 6 மணிக்குமுடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு ஜூன் மாதம் 7-ந் தேதி (அடுத்த மாதம்) காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

காய்கறிகள், மளிகை பொருட்கள் கிடைக்கும்

எனினும், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.

மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்யவும், ‘ஆன்லைன்’ மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டுசுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடைகளை திறக்க அனுமதி இல்லை

தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதால் மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி-மீன் கடைகள் திறப்பதற்கு தடை நீடிக்கிறது. ‘டாஸ்மாக்’ கடைகளும் மூடப்பட்டு இருக்கும்.

அதே நேரத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் போன்ற அரசு அனுமதித்துள்ள கடைகள் வழக்கம் போல் இயங்கும். ஓட்டல்களில் பார்சல் சேவைதொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page