இலங்கையில் 80 இந்தியர்கள் சிக்கி தவிப்பு; பணம் குறைந்து வருவதால் உடனடியாக மீட்க கோரிக்கை

Spread the love

இலங்கையில் சிக்கி தவித்து வரும் 80 இந்தியர்கள் கையில் இருக்கும் பணம் குறைந்து வருவதால் உடனடியாக தங்களை மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுடெல்லி,

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் தனது கோரப்பிடியால் மிரட்டி வருகிறது. கொரோனா வைரசால் பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவுக்கு முன் இந்தியாவில் இருந்து இலங்கை சென்ற 80 இந்தியர்கள் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் அங்கு ஓட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கி உள்ளனர்.

இது குறித்து அங்கு சிக்கி தவிக்கும் கடற்படை மாலுமி ரிபுசுதன் பிரசாத் கூறியதாவது:-

“தனது மனைவி மன அழுத்தத்தில் உள்ளார். அவளுடைய மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் முடிந்துவிட்டன. இதனால் எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என் மனைவி, எனது இரண்டு குழந்தைகளுடன் மார்ச் 7-ந் தேதி இலங்கைக்கு வந்தேன். நாங்கள் கடந்த 23-ந் தேதி துபாய்க்கு சென்று இறுதியாக ஏப்ரல் 1-ந் தேதி கொல்கத்தாவிற்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் மார்ச் 20-ந் தேதி இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் இங்கேயே சிக்கி தவித்து வருகிறோம்.

வீட்டிற்கு திரும்பிச் செல்லக்கூடிய எந்தவொரு தளர்வு குறித்தும் எந்த தகவலும் இல்லாமல் முடிவில்லாமல் போகிறது. தற்போது நாங்கள் ஓட்டலில் தங்கி உள்ளோம். பணம் குறைந்து கொண்டே போகிறது. எனவே மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கொல்கத்தாவைச் சேர்ந்த கடற்படை மாலுமியான அபிநவ் சவுத்ரி மார்ச் 4-ந்தேதி இலங்கை சென்றார். இலங்கையில் சிக்கி கொண்டது குறித்து அவர் கூறியதாவது:-

தனிமை, நிதி நெருக்கடி மற்றும் மனச்சோர்வு அதிகமாகி உள்ளது. எனது உடலும் மனமும் இனி தனிமைப்படுத்த முடியாது. ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற செய்தியுடன் நாங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். கொல்கத்தாவில் எனது மனைவி, ஆறு வயது குழந்தை மற்றும் வயதான பெற்றோர்கள் நான் திரும்புவேன் என காத்திருக்கிறார்கள். இதற்கு உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் அங்கு 80-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திரமோடிக்கு இலங்கையில் சிக்கி தவித்து வரும் நிலைமை குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவு செய்து அங்கிருந்து மீட்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் ஊரடங்கு தொடர வாய்ப்புள்ளதாலும், பல மாநில அரசுகள் நீட்டிப்புக்காக மத்திய அரசை கோருவதாலும் நிலைமை உடனடியாக மாற வாய்ப்பில்லை. எனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளிநாடுகளில் உள்ள தூதரகத்தின் பணிகளை நீட்டிக்க அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page