கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த உலக சுகாதார அமைப்பின் ஊழியர் துப்பாக்கிச்சூட்டில் பலி – மியான்மரில் பரபரப்பு

Spread the love

மியான்மரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த உலக சுகாதார அமைப்பின் ஊழியர் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைபியிடவ்,

மியான்மரின் வடக்கு பகுதியில் உள்ள ராகினே மாகாணத்தில் சுய ஆட்சிக்கோரி குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். மேலும் அந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், கிளர்ச்சி ராணுவ படையை உருவாக்கி அந்த நாட்டு ராணுவத்துடன் ஆயுத மோதலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தை மூலம் இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா மியான்மரிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது. அந்த நாட்டில் 80-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 4 பேர் வைரசுக்கு பலியாகியுள்ளனர்.

இதனிடையே ராகினே மாகாணத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த அமைப்பின் ஊழியரான பியா சோன் வின் மவுங் என்பவர், நேற்று ராகினே மாகாணத்தில் கொரோனா அறிகுறியுடன் இருக்கும் நபர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்துவிட்டு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அந்த வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பியா சோன் வின் மவுங், சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த தாக்குதலை மியான்மர் ராணுவ வீரர்கள் நடத்தியதாக கிளர்ச்சியாளர்களும், கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக மியான்மர் ராணுவமும் பரஸ்பர குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த உலக சுகாதார அமைப்பின் ஊழியர் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page