4 முறை தோல்விக்கு பிறகு ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஈரான்

Spread the love

ஈரான், 4 முறை தோல்விக்கு பிறகு ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரான் இதனை சாதித்துள்ளது.

டெஹ்ரான்,

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நாள்முதல் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனிடையே ஈரான், மற்ற உலக நாடுகளுக்கு இணையாக விண்வெளி திட்டத்தில் சாதிக்க வேண்டுமென தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

ஆனால் அந்த நாடு விண்வெளி திட்டத்தை ஒரு மறைவாக பயன்படுத்தி அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனை காரணம் காட்டி ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்த பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் தனது விண்வெளி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

ஆனாலும் விண்வெளி திட்டத்தில் ஈரான் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்தது. கடந்த சில மாதங்களாக செயற்கைகோளை விண்ணில் செலுத்த ஈரான் எடுத்த 4 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இதனிடையே உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் ஈரானும் உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் திணறி வரும் ஈரானுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் கூடுதல் தலைவலியாக அமைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவுடனான பதற்றம் மற்றும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் ஈரான் தனது முதல் ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதித்துள்ளது.

மத்திய ஈரானில் உள்ள பாலைவனத்தில் இருந்து ‘நூர்’ என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இலக்கை வெற்றிகரமாக அடைந்த செயற்கைகோள், புவி வட்டப்பாதையில் 425 கி.மீ தொலைவில் சுற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page