கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மலேரியா மருந்து வேலை செய்யாதா? – அமெரிக்காவில் அதிகளவில் இறப்புகள் பதிவானதாக தகவல்

Spread the love

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மலேரியா மருந்து வேலை செய்யவில்லை, அமெரிக்காவில் இந்த மாத்திரை கொடுக்கப்பட்டவர்களிடையே அதிகளவில் இறப்புகள் பதிவாகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

வாஷிங்டன்,

உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று நோயை குணப்படுத்த இன்றளவும் ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதே போன்று தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு, இந்தியாவில் மலேரியாவுக்கு தருகிற ஹைட்ராக்சிகுளோராகுயின் மாத்திரைகள் நன்றாக வேலை செய்வதாக தகவல்கள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து, இந்த தொற்றுநோய் அமெரிக்காவில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், இந்திய பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசி, இந்த மாத்திரைகளை ஏராளமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து இந்த மாத்திரைகள் மீதான ஏற்றுமதி தடையை இந்திய அரசு விலக்கிக்கொண்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. அமெரிக்காவில் சுமார் 3 கோடி மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இப்போது இந்த மாத்திரைகள், கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதித்தவர்களுக்கு உரிய பலனைத் தரவில்லை என்று அமெரிக்காவில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அங்கு தேசிய சுகாதார நிறுவனமும், வெர்ஜீனியா பல்கலைக்கழகமும் ஆய்வு செய்துள்ளன.

அதில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதித்தவர்களுக்கு இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தனியாகவோ, அஜித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக் மாத்திரையுடன் சேர்த்தோ தந்தபோதும், இறப்பு விகிதங்களை குறைக்கத்தவறி விட்டது. மேலும், இறப்புவிகிதங்களை கூடுதலாக பதிவு செய்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த புதிய ஆய்வு பகுப்பாய்வு செய்யப்படவில்லை. 368 நோயாளிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் இது தொடர்பாக நேற்று முன்தினம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், இப்படி அறிக்கை வெளியாகி இருப்பது பற்றி எனக்கு தெரியாது. அதே நேரத்தில் சில நல்ல அறிக்கைகளும் வெளியாகி இருப்பது வெளிப்படை. இந்த அறிக்கை நல்ல அறிக்கையாக இல்லாமல் இருக்கலாம். இது பற்றி ஆராயப்படும் என பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page