கொரோனா வைரஸ் தாக்குதலால் குழந்தைகளுக்கு புதிய ஆபத்து – ஐ.நா. சபை பரபரப்பு அறிக்கை

Spread the love

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக குழந்தைகளுக்கு புதிய ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக ஐ.நா. சபையின் அங்கமான யுனிசெப் எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் குழந்தைகளுக்கு புதிய ஆபத்து – ஐ.நா. சபை பரபரப்பு அறிக்கை

நியூயார்க்:

சீனாவில் தோன்றிய கொலைகார கொரோனா வைரஸ் தொற்றுநோய், ஏறத்தாழ உலக நாடுகள் அனைத்திலும் பரவி விட்டது.

இந்த வைரஸ் நோய்க்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு போர் தொடுத்து வருகின்றன. எல்லா நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முற்றிலுமாக மீள்வது எப்படி என்பதில்தான் கவனம் செலுத்தி வருகின்றன. இதில் பல நாடுகள் ஊரடங்கையும் அறிவித்துள்ளன. இதனால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதுகாப்பு

இந்த நிலையில் ஐ.நா. சபையின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருவதால் உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு தட்டம்மை, டிப்தீரியா, போலியோ ஆகியவற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் போடுவதை இழக்கிற ஆபத்து ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் போலியோ சொட்டு மருந்துகள் வழங்கும் முகாம்களை நிறுத்தி வைத்துள்ளன. 25 நாடுகளாவது தட்டம்மை தடுப்பூசி முகாம்களை ஒத்திப்போட்டுள்ளன.

இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் தோன்றுவதற்கு முன்பேகூட, ஒரு வயதுக்கு உட்பட்ட 2 கோடி குழந்தைகள் போலியோ, தட்டம்மை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு மருந்துகளை பெறுகிற வாய்ப்பினை இழந்து இருக்கின்றன.

இப்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிற நிலையில், குழந்தைகளுக்கு தேவையான தடுப்பு மருந்துகளை கொடுக்க முடியாத சூழலால் இந்த ஆண்டு மட்டுமின்றி அதைத்தாண்டியும் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகிற தட்டம்மை, டிப்தீரியா, போலியோ உள்ளிட்டவை பேரழிவை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யுனிசெப் அமைப்பின் முதன்மை ஆலோசகரும், தலைமை நோய் தடுப்பாளருமான ராபின் நந்தி கருத்து கூறுகையில், “இதுவரை இல்லாத வகையில் குழந்தைகளின் நலன் தொங்கலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகளவில பரவும் நிலையிலும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கும் உயிர் காக்கும் பணி முக்கியமானது. அவர்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்காவிட்டால், பலகோடி இளம் உயிர்களின் தலையெழுத்து சிக்கலாகி விடும்” என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page