கொரோனா பாதிப்புகளின் இறப்பு விகிதத்தை குறைக்க இந்தியாவில் புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விரைவில் சிகிச்சை தொடங்கும் என சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளின் இறப்பு விகிதத்தை குறைக்க புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் விரைவில் சிகிச்சை தொடங்கும் என சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
தொழுநோயை கட்டுப்படுத்தும் மைக்கோ பாக்டீரியம் என்கிற தடுப்பு மருந்து, கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடும் என்று இந்திய விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். காசநோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட பி.சி.ஜி. தடுப்பு மருந்துடன் தொடர்பு உடையதுதான் இந்த மைக்கோ பாக்டீரியம் மருந்து என்று கூறப்படுகிறது.
எனவே கொரோனாவுக்கும் இது பயனளிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிற அடிப்படையில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது.இந்த ஆராய்ச்சிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்து உள்ளார்.
இந்த நிலையில் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் மைக்கோ பாக்டீரியம் டபிள்யூ ஆய்வை நடத்தி உள்ளனர். எய்ம்ஸ் டெல்லி மற்றும் எய்ம்ஸ் போபால் ஆகிய மருத்துவமனைகளுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர். கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒரு இணைப்பாக மைக்கோ பாக்டீரியம் டபிள்யூ (எம்.டபிள்யூ) தடுப்பூசியை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்துள்ளனர்.
முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறி இருப்பதாவது:-
சமீபத்தில் முடிவடைந்த மல்டி சென்டர் சோதனையில், கடுமையாக பாதிக்கப்பட்ட ஐ.சி.யூ நோயாளிகளின் இறப்பைக் எம்டபிள்யூ தடுப்பூசி குறைக்கிறது என்பதைக் கண்டறிந்தோம்.
கொரோனா நோயாளிகளிடம் காணப்படும் சைட்டோகைனை எம்டபிள்யூ தடுப்பூசி குறைக்கக்கூடும், இதனால் இந்த நோயாளிகளை நிர்வகிப்பதில் பலனளிக்கும் மற்றும் இறப்பு விகிதத்தையும் குறைக்கும். ஆய்வுக்கு முந்தைய கட்டத்தில் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கு இந்த தடுப்பூசியின் பாதுகாப்பை ஆய்வு செய்து உள்ளோம். குறுகிய கால பாதகமான விளைவுகள் எதுவும் காணப்படவில்லை எனக் கூறினார்.