நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி – ரிசர்வ் வங்கி தகவல்

Spread the love

புதுடெல்லி,

பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். இதேபோல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இது தவிர மேலும் பல தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர்.

இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. வெளிநாடுகளில் இருக்கும் விஜய் மல்லையா உள்ளிட்ட தொழில் அதிபர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. விஜய் மல்லையா லண்டனில் இருந்தபடி, தனக்கு எதிரான வழக்குகளை சந்தித்து வருகிறார்.

இது தொடர்பாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பிரச்சினையை கிளப்பிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதனால் சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி அமளி ஏற்பட்டது.

இந்த நிலையில், சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

அதன்படி கடந்த 24-ந்தேதி ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்ற விவரத்தையும் தெரிவித்து உள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் சிலரது நிறுவனங்களுக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

* மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் -ரூ.5,492 கோடி.

* ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனம் -ரூ.4,314 கோடி.

* வின்சம் டயமண்ட்ஸ் -ரூ.4,076 கோடி

* ரோட்டேமேக் குளோபல் நிறுவனம் -ரூ.2,850 கோடி

* குடோஸ் கெமி -ரூ.2,326 கோடி

* ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி சோயா -ரூ.2,212 கோடி

* சூம் டெவலப்பர்ஸ் -ரூ.2,012 கோடி

* விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் -ரூ.1,943 கோடி

* பிரீசியஸ் ஜூவெல்லரி அண்டு டயமண்ட்ஸ் -ரூ.1,962 கோடி

* மெகுல் சோக்சியின் கிலி இந்தியா மற்றும் நட்சத்திரா நிறுவனங்கள் முறையே -ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் 50 பேர் வாங்கிய ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடனை மத்திய அரசு ரத்து செய்து இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி அளித்த பதில் மூலம் தெரியவந்து இருக்கிறது.

வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களை வெளியிடுமாறு முன்பு நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, நிதி மந்திரி அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் இப்போது நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பாரதீய ஜனதாவின் நண்பர்கள் பெயர்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. இந்த உண்மையை நாடாளுமன்றத்துக்கு தெரிவிக்காமல் மறைத்தது ஏன்? இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மத்திய அரசு ரூ.6 லட்சத்து 66 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்து இருப்பதாக காங் கிரஸ் கட்சி கூறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page