கொரோனாவுக்கு 545 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் – அமெரிக்க விஞ்ஞானிகள் கணிப்பு

Spread the love

உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு 545 கோடி மக்கள் வரை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.

நியூயார்க்,

சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 34 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்து இருக்கின்றனர்.

இதற்கிடையே இந்த வைரஸ் இன்னும் எத்தனை காலம் தாக்குதல் நடத்தி, எவ்வளவு பேரை பாதிப்படையச் செய்யும் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.

இதற்கான விடையை தேடுவதில் அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாண பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்த் துறை விஞ்ஞானிகள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக உலகை அதிகளவில் பாதிக்கச் செய்த ஸ்பானிஷ் புளூ, சார்ஸ், மெர்ஸ், எபோலா, ஸ்வைன் புளூ ஆகியவை தாக்குதல் நடத்திய காலகட்டங்களில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர்? எத்தனை பேர் உயிரிழந்தனர்? அந்த வைரஸ்களின் வீரியம் எப்படி இருந்தது? என்பதை ஒப்பீடு செய்து, அதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, 780 கோடி கொண்ட உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையிலான (அதாவது 468 கோடி முதல் 545 கோடி வரை) மக்கள் கொரோனாவால் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

அதேநேரம் எவ்வளவு உயிர்களை கொரோனா காவு கொள்ளும்? என்ற கணிப்பை அவர்கள் தெரிவிக்கவில்லை.

இதுபற்றி அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் 18 முதல் 24 மாதங்கள் வரை தனது தாக்குதலை தொடரும். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இதன் தாக்குதல் எதிர்பார்ப்பதை விட கூடுதலாக இருக்கும். ஏனென்றால், இந்த வைரஸ் மனித சமுதாயத்துக்கு மிகவும் புதியது. இதற்கான நோய் எதிர்ப்பு சக்தி யாருக்கும் இல்லை.

மேலும், ஒருவர் மூலம் இன்னொருவருக்கு கொரோனா தொற்று பரவுவது முந்தைய வைரசுகளை விட அதிக சராசரி வீதத்தில் காணப்படுகிறது.

அதேநேரம் ஒட்டுமொத்த உலக சமுதாயமும், இந்த 2 ஆண்டுகளில் கொரோனா வைரசை சமாளிக்கும் அளவிற்கு மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ( he-rd im-mu-n-ity ) திறனை படிப்படியாக பெற்றுவிடும். அப்போது தானாகவே கொரோனாவின் தாக்கம் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

உலக நாடுகளுக்கு மின்னசோட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர்.

அவை வருமாறு:-

சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள், இந்த பெருந்தொற்று நோய் விரைவில் ஒழிந்துவிடும் என்று பிரசாரம் செய்வதை தவிர்க்கவேண்டும்.

கொரோனாவுக்கு எதிராக மக்கள் நீண்ட போராட்டத்துக்கு தயாராக இருப்பது அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இந்த கோடை காலத்தில் கொரோனாவின் தாக்கம் குறைவதற்கு வாய்ப்பில்லை. வரும் இலையுதிர் காலம், குளிர் காலத்தின் போது கொரோனாவின் மிகப்பெரிய 2-வது அலைத் தாக்கம் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page