உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது.
ஜெனீவா,
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோர தண்டவம் ஆடுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், ஆசிய நாடுகளையும் பதம் பார்த்து வருகிறது.
உலகம் முழுவதும் சுமார் 180 நாடுகளில் ருத்ர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் முடுக்கி விட்டுள்ளன. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காததால், சமூக இடைவெளியை பின்பற்றுவதன் மூலமே, கொரோனா நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கணிசமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. உலகளவில் இன்று ஒருநாளில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 1,128,453 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 245,048 பேர் உயிரிழந்துள்ளனர்.