வெற்றிப்பாதையில் இந்தியா: கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது – மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்

Spread the love

கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தியா வெற்றிப்பாதையில் செல்கிறது என்று மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார்.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் நேற்று கூறியதாவது:-

சில நாட்களாக, புதிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இருப்பினும், குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். மேலும் மேலும் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கொரோனா நோயாளிகள் இரட்டிப்பு ஆகும் நாட்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தொற்று இல்லாத மாவட்டங்கள் 319 ஆகும்.

இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போது, நாள் ஒன்றுக்கு 74 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா ஆஸ்பத்திரிகளில் இரண்டரை லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. நாடு முழுவதும் 20 லட்சம் பாதுகாப்பு கவசங்களை அனுப்பி உள்ளோம். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி இருக்கிறோம்.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் அணுகுமுறையை உலக சுகாதார நிறுவனம் மட்டுமின்றி உலக நாடுகள் பாராட்டுகின்றன.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுவதுடன், டாக்டர்களை கவுரவமாக நடத்த வேண்டும். நாம் வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். இந்த போரில் நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு ஹர்ஷவர்தன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page