கொரோனா வைரசை செயலிழக்க செய்ய புதிய தொழில்நுட்பம் – சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு

Spread the love

கொரோனா வைரசை செயலிழக்க செய்ய புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.

சென்னை,

கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா ஒழிப்பு பணியில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க, சென்னை ஐ.ஐ.டி.யும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. அந்தவகையில் மிகவும் சிறிய துகள்கள் (‘நானோ’ துகள்கள்) சார்ந்த ‘ஆன்டிமைக்ரோபையல்’ மூலம் கொரோனா வைரசை செயலிழக்க செய்யும் மேற்பூச்சு பொருளை தயாரிக்கும் பணியில் ஐ.ஐ.டி. தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த மேற்பூச்சு பொருளை, ‘என்.95’ ரக முககவசம், அறுவை சிகிச்சை முககவசம், உடல் முழுவதும் அணியப்படும் கவசங்கள், உணவு பொருட்களை பொட்டலம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் துணிகளில் பூசலாம். இந்த மேற்பூச்சில் படும் பட்சத்தில், வைரஸ் தானாகவே செயலிழந்துவிடும். சிறிய துகள்கள் சார்ந்த ‘ஆன்டிமைக்ரோபையல்’ மேற்பூச்சு பூசப்பட்ட துணிகளை 60 முறை சலவை செய்து மீண்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.

நச்சுத்தன்மை கிடையாது

‘மியூஸ் வேரேபிள்ஸ்’ என்ற எந்திரம் மூலம் 100 மீட்டர் நீள துணியில் ஒரு சில நிமிடங்களில் சிறிய துகள்கள் சார்ந்த ‘ஆன்டிமைக்ரோபையல்’ மேற்பூச்சுகளை பூசி விடலாம். காட்டன், பாலிஸ்டர் உள்ளிட்ட எந்த துணிகளிலும் இந்த மேற்பூச்சுகளை பூசலாம். இந்த மேற்பூச்சுக்கு நச்சுத்தன்மை கிடையாது. அதனால் முககவசம், உடல் கவசங்களை தயாரிக்க பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.

மேற்பூச்சுகளை பூசுவதற்கான எந்திரம் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘என்95’ ரக முககவசம் தயாரிக்கும் கம்பெனியுடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி. இதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. அதன்படி 5 அடுக்குகளை கொண்ட ‘என்95’ ரக முககவசம் ஒன்றை தலா ரூ.300-க்கு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page