இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு 3-வது முறையாக மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இந்தியாவில் புதிதாக ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும். 195 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக அதிகரித்துள்ளதாகவும் நாடுமுழுவதும் இதுவரை 1,568 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து 12,727 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், தற்போது நாடுமுழுவதும் 32,138 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 14,541 பேரும், குஜராத்தில் 5,804 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் அதிக அளவாக மராட்டியத்தில் 14,541 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 35 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 548ல் இருந்து 583 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 465 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கோவாவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 7 பேரும் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து முழு அளவில் விடுபட்ட நிலையை கோவா அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மணிப்பூர் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகியவையும் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதும் விடுபட்டு உள்ளன. அதேவேளையில், 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின், தொற்றில்லாத நிலையை திரிபுரா அடைந்திருந்தது. இதன்பின்பு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 29 ஆக இன்று உயர்ந்து உள்ளது.