அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளிடையே பகிரப்பட்ட உளவுத்துறை அறிக்கையில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்து தோன்ற வில்லை அங்குள்ள சந்தையில் இருந்தே தோன்றி உள்ளது என கூறப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்
சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்த வார தொடக்கத்தில் உகானில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன என்று கூறியிருந்தார்.
கொரோனா விவகாரத்தில் சீனா உகான் நகரில் என்ன நடந்தது என்பது குறித்து நாங்கள் மிகவும் வலுவான அறிக்கையை வெளியிடுவோம். அது மிகவும் முடிவானதாக இருக்கும் என்று டொனால்டு டிரம்ப் நேற்று கூறினார்.
இந்த நிலையில் அமெரிக்கா உள்பட 5 நாடுகளை சேர்ந்த ஐந்து கண்கள் உளவு பகிர்வு கூட்டணி என்ற அமைப்பு வெளியிட்டு உள்ள தகவலில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்து தோன்றவில்லை. அங்குள்ள கடல் உணவு சந்தையில் இருந்தே தோன்றி உள்ளது என கூறி உள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளால் ஏற்படுத்தப்பட்டது ஐந்து கண்கள் உளவு பகிர்வு கூட்டணி. இந்த அமைப்பு நாடுகள் அளவிலான பரந்த உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன.
உளவுத்துறை அறிவு கொண்ட ஒரு மேற்கத்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறும் போது
கொரோனா வைரஸ் பரவல் என்பது ஒரு விபத்து என்பது சாத்தியமில்லை என்று நாங்கள் நினைக்கிறோம். இது இயற்கையாகவே நிகழ்ந்திருக்கலாம் மற்றும் மனித நோய்த்தொற்று இயற்கையான மனித மற்றும் விலங்குகளின் தொடர்புகளிலிருந்து வந்திருக்கலாம். ஐந்து கண்கள் உளவுத்துறை பகிர்வு கூட்டணியில் உள்ள நாடுகள் இந்த மதிப்பீட்டை ஒன்றிணைக்கின்றன என கூறினார்.
ஐந்து கண்கள் உளவு பகிர்வு கூட்டணி நாட்டைச் சேர்ந்த இரண்டாவது அதிகாரி முறையான மதிப்பீட்டை அமெரிக்கா இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை என்பதை ஒத்துக் கொண்டார்.
பிரத்தியேக உளவுத்துறை பகிர்வு குழுவின் உறுப்பினர்களிடமிருந்து வந்துள்ள இந்த மதிப்பீடு சமீபத்திய நாட்களில் டிரம்ப் மற்றும் பாம்பியோவின் பலமான கூற்றுக்களை சந்தேகத்திற்கு உட்படுத்துவதாக தெரிகிறது.
இந்த தகவல் டிரம்ப் நிர்வாகம் தனது கூற்றை ஆதரிப்பதற்கான ஆதாரங்களை வழங்குவதற்கான அழுத்தத்தை அதிகரிக்கும், ஜனாதிபதி மற்றும் அவரது உயர் தூதரிடமிருந்து ஆக்ரோஷமான பேட்டியை மீறி இதுவரை ஆதாரங்களை கொடுக்க செய்யத் தவறிவிட்டனர்.
நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க உயர்மட்ட தொற்று நோய் நிபுணரான டாக்டர் அந்தோனி ஃபவுசி, கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் தோன்றியதாக நம்பவில்லை என்று கூறி இருந்தார்.