இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை; மத்திய அரசு

Spread the love

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் சமூக பரிமாற்றமாக மாறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோன பாதிப்பு வேகமெடுத்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. கொரோனா பாதிப்பின் 3-வது நிலையான சமூக பரவல் என்ற நிலையை கொரோனா பாதிப்பு எட்டிவிட்டதோ? என்று எண்ணும் அளவுக்கு நாள் தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் என்ற நிலையை இன்னும் எட்டவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இன்று சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,900 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 46433 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 12727-பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், 1568 – பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சமூக பரவல் என்றால் என்ன?

இதை ‘கம்யூனிட்டி டிரான்ஸ்மிசன்’ என்று ஆங்கிலத்திலும், சமூக பரவல் என்று தமிழிலும் அழைப்பார்கள். பொதுமக்கள் இடையே இந்த நோய் தொற்று அதிக அளவில் பரவும் நிலை ஏற்படும்போது, யாரிடம் இருந்து யாருக்கு பரவியது என்பதை கண்டுபிடிக்கமுடியாத நிலை ஆகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரிடம் இருந்து இந்த நோய் தொற்று பரவியது என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் பெருமளவில் பரவல் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page