இங்கிலாந்தில் கொரோனாவுக்கு ஆப்பிரிக்க-ஆசிய நாட்டவர்கள் பலி அதிகம் ஏன்? – விசாரணை நடத்த உத்தரவு

Spread the love

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு ஆப்பிரிக்க-ஆசிய நாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் பலி ஆவது ஏன்? என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த வைரசுக்கு 1.9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இதில், இங்கிலாந்தில் வசிக்கும் வெள்ளையர்களை விட ஆப்பிரிக்கர்களும், ஆசிய நாட்டவர்களுமே பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியிலும் இந்த வேறுபாடு மிகுதியாக காணப்படுகிறது.

இங்கிலாந்தில் ஒரு லட்சம் பேருக்கு 33 வெள்ளையர்கள் கொரோனாவுக்கு இறந்த நிலையில், கரீபிய நாடுகளைச் சேர்ந்த வம்சாவளியினர் ஒரு லட்சம் பேரில் 89 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதுவே, ஆப்பிரிக்க கருப்பர் இன மக்கள் மத்தியில் 3.5 மடங்கு அதிகமாக காணப்படுகிறது. (அதாவது இங்கிலாந்து வாழ் வெள்ளையர் ஒருவர் இறந்தால் கறுப்பர்கள் 3.5 பேர் பலியாகின்றனர்.) இங்கிலாந்தில் வசிக்கும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த, குறிப்பாக பாகிஸ்தானியர்கள் இடையே இது 2.7 மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த மாறுபடும் இறப்பு விகிதம் தற்போது இங்கிலாந்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதைத்தொடர்ந்து, இப்படி கொரோனா பலி எண்ணிக்கையில் இன ரீதியான வித்தியாசம் ஏன் அதிகம் உள்ளது? என்பது பற்றி விரிவான விசாரணை நடத்தும்படி இங்கிலாந்து சுகாதார மந்திரி மேத் ஹன்காக் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் உடல் பருமன் கொண்டவர்கள் அதிகளவில் இறந்திருப்பது பற்றியும் சுகாதாரத் துறை விசாரிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு அதிகமாக ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாட்டவர்கள் பலியாகி இருப்பது குறித்து, அந்நாட்டின் சமத்துவ மற்றும் மனித உரிமைகள் கமிஷனின் முன்னாள் தலைவர் டிரேவர் பிலிப்ஸ் கூறுகையில், “வைரஸ்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான தாக்கத்தைத்தான் ஏற்படுத்தும் என்பார்கள். ஆனால் இங்கிலாந்தில் இறந்தவர்களது இனரீதியான பின்னணியை ஆராய்ந்தால் கதை வேறு மாதிரியாக உள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய உண்மைகளை தெளிவாக அறிய முடியவில்லை. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே இந்த கேள்விக்கு விடை கிடைக்கும்” என்று குறிப்பிட்டார்.

தாக்குவதில் கூட, கொரோனா இனப் பாகுபாடு காட்டியிருப்பது புரியாத புதிராகத்தான் உள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page