தொற்றில் இருந்து மீண்டவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திய சீனா – தடுப்பூசி உருவாக்க புதிய தகவல்கள்

Spread the love

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து சமீபத்தில் மீண்டவர்களை வைத்து சீனா ஒரு ஆராய்ச்சியை நடத்தி உள்ளது. இதில் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு அவசியமான புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தொற்றில் இருந்து மீண்டவர்களை வைத்து ஆராய்ச்சி நடத்திய சீனா – தடுப்பூசி உருவாக்க புதிய தகவல்கள்

பீஜிங்:

சீனாவின் உகான் நகரில் தோன்றியதாக கருதப்படுகிற கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளையெல்லாம் உலுக்கி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது ஒன்றேதான் இந்த வைரசை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரே தீர்வாக அமையும்.

எனவேதான் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இது தொடர்பான ஆராய்ச்சிகள் பல நாடுகளிலும் நடைபெற்று வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கி சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து முழுமையாக மீண்டவர்களை அடிப்படையாக வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தி உள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் 14 பேர் பயன்படுத்தப்பட்டனர். இவர்களில் 6 பேர் ஆரோக்கியமான சுகாதார நன்கொடையாளர்கள் ஆவர். 8 பேர் புதிதாக ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டவர்கள்.

14 பேரின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு அவற்றின்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அளவிடப்பட்டுள்ளது.

சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தி உள்ளனர். 14 பேரின் நோய் எதிர்ப்பு சக்திகள் ஆய்வில் கண்காணிக்கப்பட்டன.

இந்த ஆராய்ச்சியின் முக்கிய முடிவு, கொரோனா வைரஸ் நோயாளிகள் உடலில் ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பு பொருள்) உருவாகிறது. அத்துடன் ‘டி’ செல்களும் (டி உயிரணு) உருவாகின்றன. இவை சிறந்த தடுப்பூசியை வடிவமைப்பதற்கான முக்கிய தாக்கங்களாக அமைந்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதில் வைரசின் எந்த பகுதிகள் மிகவும் பயனுள்ளவை என்பதையும் இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. எனவே சாத்தியமான தடுப்பூசிகளுக்கு அவை குறிவைக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

அதே நேரத்தில் மனிதர்களில் சார்ஸ்-கோவ்-2-க்கான ஆன்டிபாடிகளை கண்டறிய பயன்படுத்தப்படும் ஆய்வக சோதனைகள், அவற்றின் துல்லியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை தீர்மானிக்க இன்னும் அதிகளவிலான சரிபார்ப்பு தேவை என்றும் சொல்லப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி முடிவு, பி மற்றும் டி செல்கள், கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பாதுகாப்பில் பங்கேற்க பரிந்துரை செய்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் பகுப்பாய்வு செய்வதற்கும், அதன் பொறிமுறையை புரிந்துகொள்வதற்கும் எங்கள் பணி ஒரு அடிப்படையை வழங்கி இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கடுமையான நிகழ்வுகளில், நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க ஒரு பயனுள்ள தடுப்பூசியை வடிவமைப்பதற்கான தாக்கங்களை இது கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர் சென் டோங் கூறி உள்ளார்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள், ‘ஜர்னல் ஆப் இம்யூனிட்டி’யில் (நோய் எதிர்ப்பு சக்தி இதழ்) வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page