கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

Spread the love

கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 4,829 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 1,516 பேர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர். இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்.

சென்னையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களை பார்க்க மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம்.

கொரோனா பாதிப்பு அறிகுறி இல்லாதவர்கள் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே வேறு இடத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள். கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சளி, காய்ச்சல் உள்ளவர்கள் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். முழுவீச்சில் களப்பணிகள் நடந்து வருகின்றன. இதனால் வெகுவிரைவில் நல்ல தகவல்கள் கிடைக்கும். அடிமட்ட பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார்.

இந்தியாவிலேயே, கொரோனாவால் இறப்பவர்களின் விகிதம் தமிழகத்தில்தான் மிக குறைவாக உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்காக நடமாடும் ஏ.டி.எம். உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page