எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 90 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவி

Spread the love

எடப்பாடி சட்டமன்ற தொகுதில் 90 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டதின்படி, தமிழ்நாடு முழுவதும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ள இச்சூழ்நிலையில், என்னுடைய எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அடங்கியிருக்கும் எடப்பாடி நகரம், எடப்பாடி ஒன்றியம் கொங்கணாபுரம் ஒன்றியம், நங்கவள்ளி ஒன்றியம், பூலாம்பட்டி, கொங்கணாபுரம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி மற்றும் வனவாசி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர 90 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, எனது சார்பில் விலையில்லா அரிசி சிப்பத்தை வழங்குமாறு, அந்த அந்த பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டேன்.

அதன்படி, அ.தி.மு.க. சார்பில் 3 நிர்வாகிகள் மட்டுமே முககவசம் அணிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சமூக இடைவெளியினைப் பின்பற்றி நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page