15 சிறப்பு ரெயில்கள் முன்பதிவு 20 நிமிடத்தில் விற்று தீர்ந்தன. மொத்தம் 54 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்
புதுடெல்லி
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ரெயில் சேவை ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் தொடங்குகிறது
ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்கும் வகையில் டெல்லியில் இருந்து 15 சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட உள்ளன.
இந்த ரெயில்கள் சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத், செகந்திராபாத், திப்ருகார், அகர்தலா, ஹவ்ரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேசுவர், மட்கோன், ஜம்முதாவி ஆகிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில்கள் அங்கு சென்றுவிட்டு மீண்டும் டெல்லிக்கு திரும்பி வரும்.
இந்த சிறப்பு ரெயில் செல்லும் நேரம் குறித்த கால அட்டவணையை ரெயில்வே வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்னையில் இருந்து வாரம் இருமுறை டெல்லிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
15 பயணிகள் ரெயில்களுக்கான முன்பதிவு திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் தொடங்கியது, திட்டமிடப்பட்ட தொடக்க நேரத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக. 54,000 க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்து உள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹவ்ரா-புதுடெல்லி ரெயிலுக்கான முதல் வகுப்பு ஏசி, மூன்று அடுக்கு ஏசி டிக்கெட்டுகள் முதல் 10 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்தன, மேலும் அனைத்து டிக்கெட்டுகளும் 20 நிமிடங்களில் தீர்ந்தன.
புவனேஸ்வர்-புதுடெல்லி சிறப்பு ரெயில்களுக்கான அனைத்து முதல் வகுப்பு ஏசி மற்றும் மூன்று அடுக்கு ஏசி டிக்கெட்டுகளும் மாலை 6.30 மணிக்குள் முன்பதிவு செய்யப்பட்டன.