மத்திய ஆயுதப்படை கேண்டீன்களில் உள்நாட்டு பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாட்டு மக்களுக்கு நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, இந்தியா தற்சார்பு பெற்ற நாடாக விளங்க வேண்டும் என்றும், உள்நாட்டில் தயாரான பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட மத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டீன்களில் (விற்பனை நிலையங்கள்) வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தனது ‘டுவிட்டர்’ பதிவில் தெரிவித்து உள்ளார். மேற்கண்ட படைப்பிரிவுகளில் பணியாற்றும் 10 லட்சம் பேரின் குடும்பங்களில் மொத்தம் 50 லட்சம் பேர் இருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அத்துடன், கூடுமானவரை உள்நாட்டு பொருட்களையே மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அமித்ஷா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.