மத்திய நிதி மந்திரி செய்தியாளர்களுடன் 2ம் கட்ட சந்திப்பு; புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்

Spread the love

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களுடன் நடத்தும் 2ம் கட்ட சந்திப்பில் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதுபற்றிய விரிவான தகவல்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதன்கிழமை (நேற்று) முதல் வெளியிடுவார் என்றும் அறிவித்தார்.

அதன்படி அந்த திட்டம் பற்றிய தகவல்களை நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இதில் அவர் பேசும்பொழுது, பிரதமர் மோடி பல்வேறு தரப்பினருடன் கலந்து ஆலோசித்து, பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்தை அறிவித்து உள்ளார். ‘சுயசார்பு இந்தியா’ என்ற தலைப்பிலான இந்த தொலைநோக்கு திட்டம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை, தேவை ஆகிய 5 தூண்களை அடிப்படையாக கொண்டது.

உள்நாட்டில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள்தான் பின்னர் வளர்ச்சி அடைந்து பெரு நிறுவனங்களாக மாறி உள்ளன. உள்ளூர் நிறுவனங்களை உலக நிறுவனங்கள் ஆக்குவதே மத்திய அரசின் நோக்கம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், தொழில் துறைக்கு ஊக்கம் அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என கூறினார்.

தொடர்ந்து அவர், தொழில் துறைக்கு ஊக்கம், சுகாதார பணியாளர்களுக்கு காப்பீடு, சிறு, குறு நிறுவனங்களுக்கான சலுகைகள் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதேபோன்று தொழிலாளர் வருங்கால வைப்புநிதி, ஒப்பந்தப்புள்ளி, ஒப்பந்ததாரர்களுக்கு சலுகைகள் மற்றும் கட்டுமான பணிகள் ஆகியவற்றுக்கான சலுகைகளையும் அவர் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்புகளை தொடர்ந்து, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் அவர் புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். இவற்றில் வேளாண் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெறக்கூடும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page