கொரோனா பாதிப்பு: உண்மையை மறைக்கிறதா சீனா?

Spread the love

கொரோனா பாதிப்பு குறித்த உண்மையை சீனா மறைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பீஜிங்,

சீனாவில் உள்ள உகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவி உயிர்ப்பலி வாங்க தொடங்கியது. கடந்த ஆண்டின் இறுதியில் அங்கு தோன்றிய இந்த நோய்க்கிருமி பின்னர் பல்வேறு நாடுகளுக்கும் பரவி ஏராளமானவர்களை காவு வாங்கி வருகிறது. இதற்கு முடிவு எப்போது? என்று தெரியாத நிலையில், கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் போராடிக்கொண்டு இருக்கின்றன.

உகானில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக சீனா மீது அமெரிக்கா ஏற்கனவே குற்றம்சாட்டி இருக்கிறது. ஆனால் அதை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு பற்றிய சரியான தகவல்களை வெளியிடாமல் சீனா மறைப்பதாகவும் அமெரிக்கா கூறி இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தங்கள் நாட்டில் கொரோனாவால் 84 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 4,673 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய ராணுவ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவர தகவல்கள் ரகசியமான கசிந்து உள்ளன. அந்த தகவல்களை நிபுணர்கள் ஆய்வு செய்ததன் மூலம், சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரமாக இருக்கலாம் என்று தெரியவந்து உள்ளது.

84 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சீன அரசு கூறி இருக்கும் நிலையில், அந்த நாட்டு ராணுவம் நடத்தும் பல்கலைக் கழகத்தின் தகவல்கள் மூலம், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரம் என்று தெரியவந்து இருப்பதால், கொரோனா பாதிப்பு பற்றிய உண்மைகளை சீனா மறைப்பதாக கருதப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் இருந்து ரகசியமாக கசிந்த தகவல்களை நிபுணர்கள் ஆய்வு செய்தபோது கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சீனா முழுவதும் உள்ள 230 நகரங்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஆஸ்பத்திரிகள், குடியிருப்பு வளாகங்கள், ஓட்டல்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், உணவு விடுதிகள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டு இருக்கிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் பெயர் விவரங்கள் இல்லாமல் வெறும் எண்ணிக்கை மட்டுமே இருப்பதால், ஒரு நபரே பலமுறை பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய தகவல் பற்றி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இப்படி ஒரு புதிய புள்ளிவிவரம் வெளியானது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page