நெருக்கடியில் தவிக்கும் பத்திரிகை நிறுவனங்கள்: முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை

Spread the love

கொரோனாவால், பத்திரிகை நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்க்க, பிரதமருக்கு, எம்.பி.க்கள் வாயிலாக அழுத்தம் தருமாறு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை, பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் நேற்று சந்தித்து, கோரிக்கை விடுத்தனர்.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக, உலகளவில் அனைத்து பத்திரிகைகளும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால், இந்திய பத்திரிகை நிறுவனங்களுக்கு ஏறத்தாழ, ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இத்தொழிலில், நேரடியாகவும், மறைமுகமாகவும், 30 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். பத்திரிகை நிறுவனங்களின் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக, பத்திரிகைகளின் அகில இந்திய அமைப்பான, “இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி” எனும், ஐ.என்.எஸ். சார்பில், பிரதமர் நரேந்திரமோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை தொடர்பாக, பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க, தமிழகத்தில் உள்ள முக்கிய பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதன்படி, கட்சித்தலைவர்களை நேரில் சந்தித்து, நிலைமையை எடுத்துரைத்து, அந்தக் கட்சி, எம்.பி.க்கள் கையெழுத்தை, கோரிக்கை மனுவில் பெற்றுத்தர வேண்டுகோள் விடுக்க உள்ளனர்.

முதல் கட்டமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தினமலர்’ கோவை பதிப்பு வெளியீட்டாளரும், ஐ.என்.எஸ்., துணைத் தலைவருமான, இல.ஆதிமூலம், ‘தி இந்து’ பதிப்பக குழும இயக்குனர் என்.ராம், ‘தினத்தந்தி’ இயக்குனர் எஸ்.பாலசுப்பிர மணியன் ஆதித்தன், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழும சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் மனோஜ்குமார் சவுந்தாலியா, ‘தினகரன்’ நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

முதல்-அமைச்சரை சந்தித்த பின், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து, மனு அளித்தனர். பத்திரிகை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க, தங்களது கட்சி, எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறுவதுடன், பிரதமரிடமும் வலியுறுத்துவதாக முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர் ஆகியோர் உறுதியளித்தனர். இதேபோல, அடுத்ததாக, ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்தித்து வலியுறுத்த, பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

தம்மைச் சந்தித்த பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் உரையாடிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். உயிரிழப்புகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன, சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பொது சுகாதாரத்துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட பிற துறைகள், எவ்வாறெல்லாம் துரிதமாக பணியாற்றுகின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.

கோயம்பேடு மார்க்கெட்டில் பரவாமல் இருப்பின், கொரோனா இந்தளவு சென்னையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது எனவும் கூறினார். முதல்-அமைச்சர் மேலும் கூறுகையில், ‘தமிழகத்தில் ஒரே ஆண்டில், 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கி சாதனை புரிந்துள்ளோம்’ எனவும், தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page