ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை தோல்வி “ஊசி போடப்பட்ட குரங்குகள் அனைத்துக்கும் கொரோனா”

Spread the love

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போடப்பட்ட குரங்குகள் அனைத்தும் கொரோனா தொற்று ஏற்பட்டது சோதனை தோல்வி அடைந்தது.

லண்டன்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மக்களை கொரோனாவிலிருந்து காக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சந்தேகம் எழக் காரணம், ஆய்வகத்தில் சோதனைக்காக தடுப்பூசி போடப்பட்ட ஆறு ரீசஸ் குரங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுதான்.

இந்த தடுப்பூசி தற்போது முதல் மனித மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த சோதனையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

பேராசிரியர் டாக்டர் வில்லியம் ஹசெல்டின் என்பவர் கூறும்போது

தடுப்பூசி போடப்பட்ட ஆறு குரங்குகளையும் சோதித்தபோது, தடுப்பூசி போடப்படாத மூன்று குரங்குகளின் மூக்கில் எவ்வளவு கொரோனா வைரஸ் இருந்ததோ, அதே அளவு தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளின் மூக்கிலும் இருப்பது தெரியவந்தது. இதன் பொருள் என்னவென்றால், 90 மில்லியன் பவுண்டுகள் செலவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி, கொரோனாவைத் தடுக்காமல் போகலாம் என்பதுதான்.

கொரோனா தடுப்பூசி இப்போதுதான் சோதனை முயற்சியாக முதன்முறையாக மனிதர்களுக்கு போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குறித்து விவாதித்த டாக்டர் வில்லியம் ஹசெல்டின் , ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போடப்பட்ட குரங்குகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளன. தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளின் உடலில் உள்ள வைரஸின் அளவுக்கும் தடுப்பூசி போடப்படாத குரங்குகளின் உடலில் உள்ள வைரஸின் அளவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

தடுப்பூசி போடப்பட்ட அனைத்து குரங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. இதையே மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தடுப்பூசி போடப்படும் மனிதர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும், அவர்களால் தொடர்ந்து ஏராளமானோருக்கு நோய்த்தொற்றைப் பரப்பவும் முடியும் என கூறினார்.

எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியரான எலினோர் ரிலே கூறும்போது,

தடுப்பூசி போடப்பட்டவர்கள் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகளின் எண்ணிக்கை அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கும் அளவிலோ, அவர்கள் மற்றவர்களுக்கு நோயை பரப்புவதிலிருந்தோ தடுக்கும் அளவில் இல்லை . இதே விளைவு மனிதர்களில் ஏற்படுமானால், இந்த தடுப்பூசி பகுதியளவே அவர்களை கொரோனாவிடமிருந்து பாதுகாக்கமுடியும்.ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு கொரோனாவைப் பரப்புவது குறையாது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page