நாட்டின் மொத்த கொரோனா நோயாளிகளில் 6.39 சதவீதம் பேருக்குத்தான் ஆஸ்பத்திரி சிகிச்சை தேவை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது,
புதுடெல்லி,
மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாட்டில் இப்போது சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 61 ஆயிரத்து 149 ஆகும். இவர்களில் 6.39 சதவீதம் பேருக்குத்தான் ஆஸ்பத்திரி சிகிச்சை தேவைப்படுகிறது.
2.94 சதவீதம் பேருக்கு ஆக்சிஜன் உதவியும், 3 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சையும், 0.45 சதவீதம் பேருக்கு வெண்டிலேட்டர் உதவியும் அவசியமாக உள்ளது.
இதுவரை 42 ஆயிரத்து 298 பேர் குணமடைந்துள்ளனர். ஊரடங்கின் தொடக்கத்தில், குணமடைவோர் விகிதம் 7 சதவீதமாக இருந்தது. தற்போது, 39.62 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
4-ம் கட்ட ஊரடங்கில், குறைந்த அளவிலான செயல்பாடுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலாக்கத்தை மாநில அரசுகளுடன் இணைந்து உள்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.