லக்னோ: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெர்மிட் இல்லாத பஸ்களையும், சிறிய வாகனங்களையும் அனுப்பி, காங்., தலைமை ‘கொடூரமான நகைச்சுவை’ செய்துள்ளது என அக்கட்சியின் எம்.எல்.ஏ.,வே கட்சி தலைமையை வறுத்தெடுத்துள்ளார்.
டில்லி – உ.பி., எல்லையில் சிக்கித் தவிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, 1,000 சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளதாக காங்., கட்சி அறிவித்திருந்தது. இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என காங்., பொதுச் செயலர் பிரியங்கா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், பஸ்கள் விவகாரத்தில், காங்., தலைமையை அந்த கட்சியின் ரேபரேலி தொகுதி எம்.எல்.ஏ., அதிதி சிங் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காங்., அனுப்பிய பஸ்களில் பெரும்பாலானவை சிறிய வாகனங்கள். அனுப்பப்பட்ட ஆயிரம் பஸ்களின் பட்டியலில், பாதிக்கும் மேற்பட்டவை போலியானவை. 297 குப்பை பஸ்கள், 98 ஆட்டோ ரிக் ஷாக்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள், 68 வாகனங்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லை.
இது ஒரு கொடூரமான நகைச்சுவை. ஒரு பேரழிவின் போது, இதுபோன்ற சிறுபிள்ளைதனமான அரசியல் தேவை தானா? பஸ்கள் இருந்தால், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிராவுக்கு ஏன் அனுப்பவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அவர், ‘ராஜஸ்தானின் கோட்டா நகரில், ஆயிரக்கணக்கான உ.பி., மாணவர்கள் சிக்கி தவித்த போது, அங்கு ஏன் பஸ்களை அனுப்பவில்லை. காங்., அரசால், அவர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. எல்லையில் கூட அவர்களால் விட முடியவில்லை. யோகி ஆதித்யநாத்தின் முயற்சியால் அவர்கள் உ.பி., அழைத்து வரப்பட்டனர். இதனை ராஜஸ்தான் முதல்வரும் பாராட்டினார்’ என்றார்.
தன் சொந்த கட்சி எம்.எல்.ஏ.,வே விமர்சித்ததால், காங்., தலைமை இதனை எதிர்கொள்ள முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.