கூடுதலாக ரயில்கள் இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் – பியூஸ் கோயல் தகவல்

Spread the love

கூடுதலாக ரயில்கள் இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று ரெயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனால், ரெயில், பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரெயில்களை நாடு முழுவதும் ரெயில்வே இயக்கி வருகிறது.

இந்த நிலையில், ஜூன் ஒன்றாம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் தெரிவித்தார். அதன்படி ஏசி வசதி இல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரயில்களை நாடு முழுவதும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று ரெயில்வே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், சுமார் 1.7 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என்று ரெயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் டிக்கெட் கவுன்டர்களிலும் முன்பதிவு தொடங்கும். கூடுதலாக ரயில்கள் இயக்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page