இந்தியாவில் சுமார் 5 கோடி மக்களுக்கு கைகளை கழுவுவதற்கு போதிய வசதிகள் இல்லை என்று ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் சுமார் 5 கோடி மக்களுக்கு கைகளை கழவுவதற்கு திறன்வாய்த வசதிகள் இல்லை என்று வாஷிங்டனை சேர்ந்த சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு (IHME) என்ற ஆய்வு நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுத்தமான தண்ணீர், சோப்புகள் போன்ற வசதிகள் இல்லாமல், ஏழை மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் சுமார் 2 பில்லியன் மக்கள் உள்ளனர். உலக மக்கள் தொகையில் பாதியளவு மக்கள், கைகளை கழுவுவதற்கு உரிய வசதிகள் பெற முடியாமல் மேற்கூறிய நாடுகளில் இருப்பதால், பணக்கார நாடுகளில் இருக்கும் நாடுகளை விட இவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் அதிகளவு இருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம், எத்தியோப்பியா, காங்கோ, இந்தோனேசியா போன்ற நாடுகளில் மக்களுக்கு சோப்புகள், கைகளை கழுவதற்கு சுத்தமான தண்ணீர் போன்ற வசதிகள் கிடைக்கப்பெறவில்லை என அந்த அறிக்கை கூறுகிறது.
சனிடைசர், அல்லது தண்ணீர் டிரக்குகள் போன்றவை தற்காலிக தீர்வுகள். கைகளைக் கழுவுவதற்கு உரிய வசதிகள் இல்லாததால், ஆண்டு தோறும் உலகளவில் 7 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், எனவே இதற்கு நீண்ட கால தீர்வுகள் அவசியம் எனவும் ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாததால், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சோப்புகளை கொண்டு சுத்தம் செய்வதன் மூலமே தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.