‘வீட்டிலிருந்தே வேலை’ திட்டம்: தொடர விரும்பும் நிறுவனங்கள்

Spread the love

புதுடில்லி : வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தை, அடுத்த ஆறு மாதங்களுக்கு தொடர விரும்புவதாக, 70 சதவீதத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
‘நைட் பிராங்’ எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், சமூக இடைவெளியை பராமரிக்கவும், வணிகத்தை தொடர்ந்து நடத்தவும், இந்த திட்டத்தை நிறுவனங்கள் தொடர விரும்புவதாக தெரியவந்துள்ளது.

பிரபல சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘நைட் பிராங்’, பலதரப்பட்ட, 230 நிறுவனங்களின் அதிகாரிகளிடம் ஆய்வை மேற்கொண்டது.வீட்டிலிருந்தே பணிகளை தொடர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதும், அதனால் உற்பத்தி திறன் எதுவும் பாதிக்கப்படவில்லை என, பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இருப்பினும், தொலைவிலிருந்து செயல்படும்போது, ஊழியர்கள், குடும்பத்துடனான இணைப்பு, கவனச்சிதறல் ஆகிய இரண்டு சவால்களை எதிர்கொண்டிருக்கின்றனர்.அடுத்த ஆறு மாதங்களுக்கு, 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் வீட்டிலிருந்து பணியாற்றுவர் என ஆய்வில் கலந்துகொண்டோரில் 50 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், 7 சதவீதத்தினர் மட்டும், அனைவரும் அலுவலகம் வந்து பணியாற்றுவர் என தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டிலிருந்து பணியாற்றிய நிலையில், உற்பத்தி திறன் அதிகரித்திருப்பதாக 28 சதவீதத்தினரும்; முன்னர் இருந்த அளவிலேயே இருந்ததாக 35 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். மேலும், 26 சதவீதத்தினர் உற்பத்திதிறன் குறைந்துவிட்டதாகவும்; 11 சதவீதத்தினர் கணித்து சொல்வது கடினம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page