ஜூன் மாத ரேஷன் பொருட்களுக்கு நாளை முதல் டோக்கன் வினியோகம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

ஜூன் 1-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் பெற நாளை(வெள்ளிக்கிழமை) முதல் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாகவே ரூ.3 ஆயிரத்து 280 கோடி மதிப்பீட்டில் சிறப்பு நிவாரண திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஏப்ரலில் அனைத்து 2.01 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்க உதவி தொகையுடன் விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டன.

இதில் 98.85 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித் தொகையும், 96.30 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்களும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. மே மாதத்திலும் இதுவரை 1.84 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, மே மாதத்திற்கான பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், நபர் ஒருவருக்கு கூடுதலாக 5 கிலோ வீதம் ஏப்ரல் முதல் ஜூன் முடிய 3 மாதங்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து, கூடுதல் அரிசியும், 4 மற்றும் அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் அரிசியை இரு மடங்காக உயர்த்தி, இந்த 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் (ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்) அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன், எப்போதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை ரேஷன் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.

இவ்வாறு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றம் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 3 மாதங்களாக தொடர்ந்து வழங்கி, மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் இந்த அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், 29-ந் தேதி(நாளை) முதல் 31-ந் தேதிவரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும்.

டோக்கன்களில் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி அவரவர் ரேஷன் கடைகளுக்குச் சென்று ஜூன் 1-ந் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

பொது மக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட் களை விலையில்லாமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page