ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிக்கூடம்- மத்திய அரசு புதிய திட்டம்

Spread the love

சுழற்சி அடிப்படையில் பள்ளிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி:

கொரோனா காரணமாக பொது முடக்கத்தை நீட்டிப்பது பற்றி புதிய நெறிமுறைகளை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. என்றாலும் விமான போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஆகிய இரண்டையும் மத்திய அரசு முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

பொதுவாக இந்தியாவில் ஒரு கல்வியாண்டில் பள்ளிகளில் 220 வேலைநாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அதாவது ஒரு மாணவர் 1320 மணி நேரம் வகுப்பறை பாடங்களை கற்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக வரும் கல்வியாண்டில் இதை அமல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பள்ளி, கல்லூரிகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதாவது 100 நாட்களில் 600 மணி நேரம் கல்வி கற்றால் போதும் என்ற விதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். மீதமுள்ள நாட்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைகளில் 30 முதல் 50 சதவீத மாணவர்களை வைத்தே வகுப்புகளை நடத்த வேண்டும்.

1 முதல் 5-ம் வகுப்புக்கு வாரத்திற்கு 2 நாட்கள் வகுப்புகள் எடுத்தால் போதும். 6 முதல் 8-ம் வகுப்புக்கு வாரத்திற்கு 4 நாட்கள் வகுப்புகள் எடுத்தால் போதும். 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு வாரத்திற்கு 5 நாட்கள் வகுப்புகள் எடுத்தால் போதும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சுழற்சி அடிப்படையில் பள்ளிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page