லட்சக்கணக்கானோரை புகை பிடிப்பதை கைவிட வைக்கிறது கொரோனா…

Spread the love

கொரோனா வைரஸ், புகை பிடிப்போர் வாழ்வில் ‘கேம் சேஞ்சர்’ என்பது போல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.

புதுடெல்லி:

சிகரெட் புகைப்பது உள்பட புகையிலையை எந்த வகையில் ஒருவர் பயன்படுத்தினாலும் அது அவர்களுக்கு பகை, உயிராபத்தை ஏற்படுத்தும் புற்றுநோய்க்கு வழிவகுத்து விடும் என்றெல்லாம் காலகாலமாக எச்சரிக்கை விடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

புகைப்பது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் எளிதில் யாரும் புகை பிடிப்பதை விட்டு விட முன்வருவதில்லை. மது போதை போல சிகரெட் போதையில் கோடிக்கணக்கானோர் உலகமெங்கும் அகப்பட்டுள்ளனர். இப்போது கொரோனா வைரஸ், அவர்கள் வாழ்வில் ‘கேம் சேஞ்சர்’ என்பது போல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாகிறபோது அது மனிதர்களின் நுரையீரலில்தான் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. சுவாசிப்பதில் சிக்கலை உண்டுபண்ணுகிறது. வென்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச கருவிகளை பொருத்தி சுவாசிக்க வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிலும் வென்டிலேட்டர் கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில் புகை பிடிக்கிறவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரித்தது. புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகமும் வலியுறுத்தியது.

கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக லட்சக்கணக்கானோர் இப்போது மனம் மாறி வருகிறார்கள்.

யுகாவ், புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியம் என்ற பிரசார குழுவின் சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், கொரோனா வைரஸ் அச்சத்தால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டதாக தெரிய வந்தது. மேலும், 5½ லட்சம் பேர் புகை பிடிப்பதை விட முயற்சித்துள்ளனர். 24 லட்சம் பேர் தினமும் புகைக்கிற அளவை குறைத்துள்ளனர்.

இந்த நிலையில் லட்சக்கணக்கானோர் சிகரெட் புகைப்பதை விட்டு விட விரும்புகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார மேம்பாட்டு இயக்குனர் ருடிகர் கிரெச் கூறுகிறார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடிகளுக்கு மத்தியில் லட்சக்கணக்கானோர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட விரும்புவதை இப்போது நாங்கள் பார்க்கிறோம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்தும் திட்டங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புகை பிடிப்பதை கைவிட எங்களுக்கு ஆதரவு காட்டுங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

பல நாடுகளிலும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தும் திட்டங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ‘புகையிலை இல்லை’ பிரிவின் ஒருங்கிணைப்பாளரான விநாயக் பிரசாத் கூறுகிறார்.

மெக்சிகோ, ஜோர்டான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இப்படி புகையிலை பொருட்களை கைவிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்காக நாங்கள் புதிய தீர்வுகளை, தொழில்நுட்ப தீர்வுகளை தேடுகிறோம்” என்கிறார் விநாயக் பிரசாத்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் புகை பிடிப்போரும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரும் தங்கள் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் அது அவர்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page