கொரோனா பரவல் இரட்டிப்பாகும் காலம் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரட்டிப்பாக எடுத்துக்கொள்ளும் காலம் அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.
அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று இரட்டிப்பு ஆக எடுத்துக்கொள்ளும் காலம் கடந்த 3 நாட்களில் மேம்பட்டுள்ளது.
நேற்றைய நாளை கணக்கில் கொள்கிறபோது, கடந்த 14 நாட்களில் கொரோனா பரவல் இரட்டிப்பு ஆவதற்கு 13.3 நாட்கள் ஆயின. அதுவே கடந்த 3 நாட்களில் 15.4 நாட்கள் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளது. இது ஒரு சாதகமான அறிகுறி ஆகும்.
நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளோனோரின் இறப்பு வீதம் 2.86 சதவீதமாக உள்ளது.
நமது நாட்டில் கொரோனா தொற்று பரிசோதனை வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. 462 அரசு பரிசோதனைக்கூடங்களிலும், 200 தனியார் பரிசோதனைக்கூடங்களிலும் தற்போது பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதுவரை நாட்டில் 36 லட்சத்து 12 ஆயிரத்து 242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 842 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 942 பிரத்யேக ஆஸ்பத்திரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 908 தனிமை படுக்கைகள் உள்ளன. 20 ஆயிரத்து 608 தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள் உள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்க்கை 69 ஆயிரத்து 384 ஆகும்.
மேலும் அர்ப்பணிக்கப்பட்ட சுகாதார மையங்கள் 2,380 உள்ளன. அவற்றில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 678 தனிமை படுக்கைகள் உள்ளன. 10 ஆயிரத்து 916 தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள் உள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்க்கை 45 ஆயிரத்து 750 ஆக இருக்கிறது. 10 ஆயிரத்து 541 தனிமைப்படுத்தல் மையங்களும். 7,304 கொரோனா பராமரிப்பு மையங்களும் உள்ளன.
கொரோனா வைரஸ் சிகிச்சை வகையில் 1 கோடியே 19 லட்சத்து 88 ஆயிரம் என்-95 முக கவசங்களும், 96 லட்சத்து 14 ஆயிரம் சுய பாதுகாப்பு கருவிகளும் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.