இந்தியாவில் தலா 10 லட்சம் பேரில் 33 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,763 லிருந்து 1,82,143 ஆக அதிகரித்து உள்ளது உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,971 லிருந்து 5,164 ஆக உயர்ந்து உள்ளது. 193 நோயாளிகள் நேற்று இறந்த பின்னர், தொற்று நோயுடன் தொடர்புடைய மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370 லிருந்து 86,984 ஆக உயர்ந்து உள்ளது என கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 8,000-ஐ தாண்டியது இதுவே முதல் முறை.
இந்தநிலையில், இந்தியாவில் தலா 10 லட்சம் பேரில் 33 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு எனவும் மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. மேலும் 10 லட்சம் பேரில் 50 வயது முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்களில் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஆண்கள் 41 பேரும், பெண்கள் 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.