ஸ்பெயின் விருந்தில் கலந்து கொண்ட பெல்ஜியம் இளவரசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரசல்ஸ்,
பெல்ஜியம் நாட்டின் இளவரசர் ஜோசிம் (வயது 28). இவர் கடந்த 26-ந் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சென்ற 2 நாட்களுக்கு பின்னர் கார்டோபா நகரில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விருந்தில் 27 பேர் கலந்து கொண்டனர். அங்கு கொரோனா வைரஸ் பரவல் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள விதிமுறைகள்படி 15 பேர்தான் கலந்துகொண்டிருக்க வேண்டும். இந்த விதிமுறை அந்த விருந்தில் மீறப்பட்டுள்ளது. மேலும் இந்த விருந்தில் கலந்து கொண்ட நிலையில் இளவரசர் ஜோசிம்முக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து அங்குதான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த விருந்து நிகழ்ச்சிக்கு அங்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. ஸ்பெயின் அரசு பிரதிநிதி ரபேலா வேலன்சூலா, இந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள் பொறுப்பற்றவர்கள் என சாடினார்.
கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள பெல்ஜியம் இளவரசர் ஜோசிம்முக்கு, ஸ்பெயினில் ஒரு பெண்ணுடன் நீண்ட கால உறவு இருப்பதாக ‘விக்டோரியா ஆர்டிஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதித்து இருப்பதும், 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.