2 மாதங்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறப்பு அழகு நிலையங்களும் செயல்பட தொடங்கின

Spread the love

2 மாதங்களுக்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல அழகு நிலையங்களும் செயல்பட தொடங்கின.

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட தொடங்கியதும் மூடப்பட்ட கடைகளில் சலூன் கடைகளும், அழகு நிலையங்களும் அடங்கும். கடந்த மாதம் 4-ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயம் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கிராம பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதையடுத்து 5-ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 2 மாத காலமாக மூடப்பட்டிருந்த சலூன் கடைகள் மீண்டும் புத்துயிர் பெற்றன. நேற்று முன்தினமே கடைகளை திறந்து சுத்தம் செய்யும் பணியில் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இந்தநிலையில் புதுப்பொலிவுடன் சலூன் கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. ஊரடங்கால் முடிவெட்டவோ, சேவிங் செய்யமுடியாமல் நீண்ட முடி மற்றும் தாடியுடன் அலைந்தவர்கள் நேற்று சலூன் கடைகள் முன்பு கூடினர்.

ஆனால் சலூன் கடைக்காரர்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை சிறப்பாக கையாண்டனர். கடையின் முன்பு கிருமிநாசினி வைக்கப்பட்டிருந்தது. அதை கைகளில் தேய்த்த பின்னரே வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாதோரை கடைகளில் அனுமதிக்கவில்லை. கடைக்காரர்களும் முக கவசம் மற்றும் கையுறை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டும் பணியை மேற்கொண்டனர்.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சலூன் கடைகள் நேற்று திறக்கப்பட்டிருந்ததையும், தனிமனித இடைவெளியை கடைபிடித்து முடிவெட்டும் பணியில் கடைக்காரர்கள் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது.

இதுகுறித்து திருவான்மியூர் சலூன் கடைக்காரர் விஜய் முருகன் கூறியதாவது:-
25 வருடங்களாக முடிவெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். கொரோனா காலம் போல ஒரு கொடிய காலத்தை பார்த்தது இல்லை. ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக வாழ்வாதாரம் தொலைந்து முடி திருத்தும் தொழிலாளர்கள் தவித்து வந்தோம். நல வாரியத்தில் அறிவிக்கப்பட்டிருந்த உதவித்தொகையும் எங்களில் பெரும்பாலானோருக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தோம்.

தற்போது சலூன் கடைகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசுக்கு நன்றி. அரசின் அறிவுரைகளை முறையாக கையாளுவதில் உறுதியாக இருக்கிறோம். கத்தரி, சீப்பு உள்ளிட்ட கருவிகளை கிருமிநாசினி கலந்த சுடுதண்ணீரில் போட்டுள்ளோம். அதேபோல கிருமிநாசினி பயன்படுத்துகிறோம். முக கவசம் அணியாதோரை கடைக்குள் நுழையவிடுவதே கிடையாது. கடையில் 3 நாற்காலிகள் இருப்பதால் முன்பு ஒரே நேரத்தில் 3 பேருக்கு முடிவெட்டுவோம். இப்போது தனிமனித இடைவெளியை கருத்தில் கொண்டு 3-ல் 2 நாற்காலிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க சலூன் கடைக்காரர்கள் தயாராகவே இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சலூன் கடைகள் போலவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அழகு நிலையங்களும் (பியூட்டி பார்லர்) நேற்று முதல் செயல்பட தொடங்கின. இதனால் கடந்த 2 மாதங்களாக தங்களை அழகுபடுத்தி கொள்ள முடியாமல் தவித்து வந்த பெண்கள் நேற்று அழகு நிலையங்களில் முன் அனுமதி பெற்று சென்றனர். பெடிகியூர், மெனிகியூர், ஹேர்கட், பேஷியல், ஐ-ப்ரோ திரெட்டிங், ஸ்பா உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தங்களை அழகுபடுத்தி கொண்டனர்.

தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டு ஒவ்வொருவராக அழகு நிலையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கூட்டமாக நிற்க அனுமதிக்கப்படவில்லை. அழகு நிலையங்கள் திறக்கப்பட்டதால் பெண்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதுகுறித்து பெண்கள் சிலர் கூறுகையில், ‘பியூட்டி பார்லர்கள் எப்போது திறக்கும் என்று ஏங்கிக்கொண்டு இருந்தோம். தற்போது பியூட்டி பார்லர் திறக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைகிறோம். இதன்மூலம் எங்கள் அழகை இன்னும் மேம்படுத்தி கொள்வோம். ஊரடங்கு காலத்தில் எங்கள் அழகை பராமரிக்க நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அந்த சிரமம் இனி இருக்காது என்பதில் நிம்மதி அடைகிறோம்‘, என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page