விவசாயிகள் வருவாயை பெருக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Spread the love

விவசாயிகள் வருவாயை பெருக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், 65 ஆண்டுகாலமாக நடைமுறையில் உள்ள அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த முடிவு குறித்து மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த சட்ட திருத்தம், விவசாய துறைக்கு புத்துயிரூட்டும். விவசாயிகள் வருவாயை பெருக்க உதவும். அதிகப்படியான தலையீடு குறித்த தனியார் முதலீட்டாளர்களின் அச்சத்தை களைவதாக இந்த சட்ட திருத்தம் அமையும்.

மேலும், வேளாண் பொருட்கள் தொடர்பான தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்வதற்காக ஒரு அவசர சட்டம் பிறப்பிக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

‘ஒரே நாடு ஒரே சந்தை‘ என்ற திட்டத்துக்காக ஒரு அவசர சட்டம் கொண்டுவரப்படும். இவைவெயல்லாம் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார திட்டங்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.

கொல்கத்தா துறைமுகத்துக்கு மறைந்த ஜனசங்க நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி பெயர் சூட்டப்படுவதாக கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். இந்த பெயர் மாற்றத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்தியாவில் முதலீட்டை ஈர்ப்பதற்காக ‘அதிகாரம் அளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு‘ அமைக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 2024-2025 நிதியாண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டிப்பிடிக்கும் இந்தியாவின் லட்சியத்தை ஊக்குவிக்கும் வகையில் இம்முடிவு அமையும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page