புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

Spread the love

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு, அவர்களுக்கு நன்றியற்றவர்களாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘வேலைக்காக சென்று ஊரடங்கினால் மராட்டிய மாநிலத்தில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 400 தொழிலாளர்களை மீட்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர், இந்த மனுவுக்கு பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். மேலும், தமிழகத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஆஜராகி, ‘ஈரோடு, நாகர்கோவில், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு, தங்கும் இடமின்றி சுற்றித்திரிகின்றனர்‘ என்று கூறினார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் தங்கவேல், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்து வருவதாக கூறினார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், ‘மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ரெயில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஒருங்கிணைந்த பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்‘ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு, தங்கும் இடம், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பது மாநில அரசின் கடமையாகும். வெளிமாநிலத் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி விட்டு, அவர்களுக்கு நன்றி அற்றவர்களாக அரசு இருக்கக்கூடாது.

எனவே, அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும். அதுகுறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்‘ என்ற உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page