ரூ.37,500 கோடி வழங்க கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு

Spread the love

உபயோகிப்பாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

உலகளவில் புகழ்பெற்ற தேடுதல் இணையதளம், கூகுள்.

இந்த தேடல் இணையதளத்தில் ‘இன்காக்னிசோ மூட்’ (பிரைவேட் மூட்) என்ற தனியார் பயன்முறையில் ஒருவர் எதையாவது தேடுகிறபோது, அவரது அந்தரங்க உரிமையை மீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கண்காணிப்பதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த ‘இன்காக்னிசோ மூட்’ பயன்முறையில் உபயோகிப்பாளர்கள் தேடுகிறபோது, அவர்கள் எதையெல்லாம் தேடுகிறார்கள் என்பது கண்காணிக்கப்படாது என்ற நம்பிக்கையில்தான் தேடுகிறார்கள். அவர்கள் என்ன தேடுகிறார்கள் என்பதுவும் அதில் பதிவாகாது. அந்த நம்பிக்கையின் மீது இடி விழுந்தாற்போன்று, இப்போது அது கண்காணிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் இது தொடர்பாக கூகுள் நிறுவனம் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37,500 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு கலிபோர்னியா மாகாணம், சான் ஜோஸ் நகரில் உள்ள மத்திய கோர்ட்டில் போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

அந்த வழக்கில், கூகுள் கணினி அல்லது செல்போனை கொண்டுள்ள ஒவ்வொருவரிடம் இருந்தும் ரகசிய மற்றும் அங்கீகரிக்கப்படாத தரவு சேகரிப்பில் தொடர்ந்து ஈடுபட முடியாது என கூறப்பட்டுள்ளது.

மேலும் எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் தங்களது தனிப்பட்ட தகவல் தொடர்புகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் தடுத்து, சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படுகின்றன அல்லது ஆதாயத்துக்காக சுரண்டப்படுகின்றன என்பதை அறிந்து கவலைப்படுகிறார்கள் என்றும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூகுள் செய்தி தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனெடா கூறியதாவது:-

ஒவ்வொரு முறையும் நீங்கள் புதிதாக ஒரு அந்தரங்க பயன்முறை தாவலை (டேப்) திறக்கும்போம், உங்கள் உலாவல் செயல்பாடுகள் குறித்த தகவல்களை சேகரிக்க முடியும் என்று சொல்கிறோம்.

இந்த பயன்முறையில் தேடுகிறபோது, ஒருவர் எதை தேடுகிறார் என்பதை தேடுதல் சரித்திரம் மூலம் அறிந்து, அந்த தளங்கள் அதன் உள்ளடக்கத்தையும், தயாரிப்புகளையும் சந்தைப்படுத்தல் மற்றும் செயல்திறனையும் சிறப்பாக மதிப்பீடு செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

சான் ஜோஸ் நகரில் உள்ள மத்திய கோர்ட்டில் போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் சட்ட நிறுவனம் தொடுத்துள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page