ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் – மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Spread the love

தமிழ்நாட்டில் இப்போது உள்ள கொரோனா பரவல் நிலை நீடித்தால் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

சீனாவில் உருவெடுத்த ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரசின் ஆக்டோபஸ் கரங்களுக்கு இந்தியாவும் தப்பவில்லை. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி, கொரோனா வைரசின் முதல் பாதிப்பு தொடங்கியது. இது ஏப்ரல் 1-ந்தேதியன்று 234 பேருக்கு என்ற நிலையை அடைந்தது. இந்த எண்ணிக்கை, மே 1-ந்தேதி 2 ஆயிரத்து 526 என்ற நிலை ஏற்பட்டது. இப்படி படிப்படியாக கொரோனா வைரசின் தாக்கம் ஊடுருவி வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் நேற்று வரையிலான நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 694 ஆகும். சென்னையில் மட்டும் 19 ஆயிரத்து 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற நிலையை அடைந்திருக்கிறது. மொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 69.09 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படி கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் மிக அபரிமிதமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தநிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், நோய் பரவியல் துறை தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட சில நிபுணர்கள் கொண்ட குழு அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு தரவுகள், சான்றுகள் அடிப்படையில் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டனர். தமிழகத்தில் அடுத்த சில மாதங்களுக்கு கொரோனா தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதுதான் அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் முக்கிய அம்சமாகும். இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது இப்போது உள்ள நிலை நீடித்தால் ஜூலை மாதம் 15-ந்தேதி தமிழகத்தில் 3.3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள். இதில் சென்னையில் மட்டும் 1.50 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை 1,949 ஆக இருக்கும் என்றும், சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை 1,654 ஆக இருக்கும் என்றும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக நோயின் தாக்கம் குறையும் என்றும் தெரியவந்துள்ளது. டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page