820 நினைவு சின்னங்கள் இன்று மீண்டும் திறப்பு: மத்திய அரசு அறிவிப்பு

Spread the love

தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் 820 நினைவு சின்னங்களை இன்று மீண்டும் திறக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் 3 ஆயிரத்து 691 நினைவு சின்னங்கள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் 17-ந் தேதி இவை மூடப்பட்டன. பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், இவற்றில் வழிபாட்டு தலங்களுடன் கூடிய 820 நினைவு சின்னங்களை இன்று (திங்கட்கிழமை) திறக்க மத்திய கலாசார அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது.

இதை மத்திய கலாசாரத்துறை மந்திரி பிரகலாத் படேல் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

பார்வையாளர்கள், மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆன்லைன் டிக்கெட் எடுத்திருக்க வேண்டும். முக கவசம் அணிந்துவர வேண்டும் என்று அவர் கூறினார்.

இன்று திறக்கப்படும் 820 நினைவு சின்னங்களில், வடக்கு பிராந்தியத்தை சேர்ந்த 114 சின்னங்களும், மத்திய பகுதியை சேர்ந்த 155 சின்னங்களும், மேற்கு பகுதியை சேர்ந்த 120 சின்னங்களும், தெற்கு பகுதியை சேர்ந்த 279 சின்னங்களும், கிழக்கு பகுதியை சேர்ந்த 100 சின்னங்களும் அடங்கும். நகரவாரியாக பார்த்தால், குஜராத் மாநிலம் வடோதராவில் 77 நினைவு சின்னங்கள் திறக்கப்படுகின்றன. அடுத்தபடியாக, சென்னையில் 75 நினைவு சின்னங்களும், பெங்களூருவில் 69 நினைவு சின்னங்களும் திறக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page