புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்: மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Spread the love

புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

புதுடெல்லி,

வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் அவலம் குறித்து வருத்தம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, இது குறித்து “புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையும் துயரமும்“ என்ற பெயரில் கடந்த மாதம் 26-ந் தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய மெய்நிகர் அமர்வில் காணொலி காட்சி மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

* அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் தவித்து வரும் வெளிமாநில தொழிலாளர்களை ரெயில்கள் அல்லது பஸ்கள் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

* சொந்த ஊர்களுக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புக்கான உதவி மையங்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

* ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்ற மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டமாக நின்ற தொழிலாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்வதற்கு அனைத்து மாநிலங்களும் பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page