சென்னையில் டாக்டர் உள்பட 21 பேர் கொரோனாவுக்கு பலி – தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்குகிறது

Spread the love

தமிழ்நாட்டில் இதுவரையில் இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் டாக்டர் உள்பட 21 பேரின் உயிரை கொரோனா பறித்தது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பிடியில் சிக்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் உயருகிறது. குறிப்பாக இளம் வயதினர் உயிரையும் கொரோனா பறித்து வருவது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. இதுவரையில் இல்லாத வகையில் சென்னையில் 21 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 1,649 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 5 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 31 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தமிழகத்தில் நேற்று மொத்தம் 1,685 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 1,091 பேர் ஆண்கள், 594 பேர் பெண்கள் ஆவர்.

தமிழகத்தில் இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்று 35 ஆயிரத்தை எட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. சென்னை தனியார் மருத்துவமனை டாக்டர், 30 வயது வாலிபர் உட்பட நேற்று 21 பேர் சென்னையில் உயிரிழந்து உள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 15 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். திருவள்ளூரை சேர்ந்த 53 வயது முதியவரும் இதில் அடங்குவார். இதுவரையில் தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 798 பேர் பூரண குணம் அடைந்தனர். இதுவரையில் 18 ஆயிரத்து 325 பேர் குணம் அடைந்து உள்ளனர். தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி 16 ஆயிரத்து 279 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சென்னை மருத்துவமனைகளில் மட்டும் 12 ஆயிரத்து 570 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். தமிழகத்தில் நேற்று 27 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 1,243 பேரும், செங்கல்பட்டில் 158 பேரும், திருவள்ளூரில் 90 பேரும், காஞ்சீபுரத்தில் 32 பேரும், திருவண்ணாமலையில் 19 பேரும், மதுரை, வேலூரில் தலா 16 பேரும், தூத்துக்குடி, நெல்லையில் தலா 10 பேரும், தஞ்சாவூரில் 8 பேரும், நாகப்பட்டினம், திருவாரூரில் தலா 7 பேரும், ராமநாதபுரம், திண்டுக்கலில் தலா 6 பேரும், கோவையில் 5 பேரும், புதுக்கோட்டை, திருச்சியில் தலா 4 பேரும், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலத்தில் தலா 3 பேரும், தேனியில் 2 பேரும், தர்மபுரி, கன்னியாகுமரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 64 குழந்தைகளையும், 60 வயதுக்கு மேற்பட்ட 257 முதியவர்களையும் கொரோனா தொற்றியது. இதுவரையில் 12 வயதுக்கு உட்பட்ட 1,839 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆயிரத்து 815 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1,917 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page