பணிச்சுமைக்கு ஏற்ற ஊதியம் வழங்கக்கோரிஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் நர்சுகள் திடீர் போராட்டம்

Spread the love

பணிச்சுமைக்கு ஏற்ற ஊதியம் வழங்கக்கோரி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த நர்சுகள் நேற்று போராட்டம் நடத்தினர்.

சென்னை,

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4 ஆயிரத்து 900 படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள், தூய்மை பணியாளர்கள் என பலர் பணி செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் தங்களுக்கு பணிச்சுமையும் அதிகரிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒப்பந்த நர்சுகள், பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் நேற்று திடீர் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தின் போது அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முககவசம் அணிந்திருந்தனர்.

டீன் சமரசம்

போராட்டம் குறித்து நர்சு ஒருவர் கூறும்போது, ‘தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். ‘ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் 400 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு பணிவிடை செய்வதற்கு 20 நர்சுகள் மட்டுமே இருக்கிறோம்.’ இதன் காரணமாக எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கூடுதல் நேரம் பணியாற்றுகிறோம். எனவே பணிச்சுமைக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும்’, என்றார்.

இதையடுத்து மருத்துவமனை டீன் டாக்டர் நாராயணபாபு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை கடிதம் ஒன்றை மருத்துவமனை டீன் டாக்டர் நாராயணபாபுவிடம் கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page