கூட்டாண்மை நிறுவனங்களை இணைய வழி மூலம் பதிவு செய்யும் வசதி புதுப்பொலிவுடன் அமல் – பதிவுத்துறை தலைவர் பா.ஜோதி நிர்மலாசாமி தகவல்

Spread the love

கூட்டாண்மை நிறுவனங்களை இணையவழி மூலம் பதிவு செய்யும் வசதி புதுப்பொலிவுடன் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தலைவர் பா.ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பதிவுத்துறை தலைவர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய கூட்டாண்மை நிறுவன சட்டம், 1932ன் கீழ் கூட்டாண்மை நிறுவனங்கள் மாவட்ட பதிவாளரால் பதிவு செய்யப்பட்டு உரிய பதிவு சான்று வழங்கப்படுகிறது. இந்த கூட்டாண்மை நிறுவன பதிவு சம்பந்தமான அனைத்து நடைமுறைகளும் ஸ்டார் 2.0 திட்டத்தின் மூலம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

கூட்டாண்மை நிறுவனத்தினர்கள் தங்கள் இருப்பிடம், அலுவலகத்தில் இருந்து இணையவழி உள்நுழைவு உருவாக்கி நிறுவன பதிவிற்கான அனைத்து படிவங்களையும் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்கள் மாவட்ட பதிவாளரால் பரிசீலிக்கப்பட்டு உரிய முறையில் இருப்பின் அக்கூட்டாண்மை நிறுவனம் பதிவு செய்யப்பட்டு மின்னணு கையொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் உள்நுழைவு வழி அனுப்பப்படும்.

இச்சான்றிதழினை கூட்டாண்மை நிறுவனத்தினர் தங்களது உள்நுழைவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்களில் ஏதும் குறைபாடு இருப்பின் அதன் விவரத்தை தெரிவித்து இணைய வழி திருப்பி அனுப்பப்படும். இந்த குறைபாட்டை சரி செய்து மீண்டும் பதிவேற்றம் செய்தால் மாவட்ட பதிவாளரால் பரிசீலிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு மின்னணு கையொப்பமிட்ட சான்றிதழ் நிறுவனத்தினரின் உள்நுழைவிற்கு அனுப்பப்படும்.

இதன்மூலம் கூட்டாண்மை நிறுவனங்கள் பதிவு செய்ய மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. இதேபோன்று சீட்டு நிறுவனங்கள் கால முறையாக நடத்தும் சீட்டு ஏலங்கள் குறித்த ஏல நடவடிக்கை நிகழ்ச்சி நிரல் குறிப்புகளை இணைய தளம் வழியே அனுப்பலாம். நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page