ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மது விற்பனை செய்வதை ஏன் பரிசீலிக்கக்கூடாது? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

Spread the love

ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு வீடுகளுக்கே நேரடியாக சென்று மது விற்பனை செய்வதை ஏன் பரிசீலிக்கக்கூடாது? என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி,

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் கடந்த மாதம் 7-ந்தேதி திறக்கப்பட்டன. இதை எதிர்த்து வக்கீல் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 8-ந் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.

இதே போன்ற மனு ஒன்றின் மீது மதுரை ஐகோர்ட்டும் கடந்த மே 11-ந் தேதி மதுக்கடைகளை மூடுவது தொடர்பான உத்தரவு பிறப்பித்தது.

சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளின் இந்த தீர்ப்புக்களுக்கு எதிராக டாஸ்மாக் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுக்கடைகளை மூடுமாறு பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த மனுதாரர்கள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது பதில்மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் எதிர் மனுதாரர்கள் தரப்பில், ‘தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மது விற்பனையால் அது மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மது அருந்துவோரின் எதிர்ப்பு சக்தி குறைவதால் கொரோனா மேலும் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது’ என்று வாதிடப்பட்டது.

இதற்கு டாஸ்மாக் தரப்பில், ‘பெரும்பாலான மாநிலங்களில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.

இதற்கு நீதிபதிகள் மதுக்கடைகளில் விற்பனை உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டியிருப்பதால் வழக்கு நிலுவையில் இருக்கட்டும் என்று கூறினார்கள்.

மேலும் தமிழகத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்பவர்களுக்கு வீடுகளில் நேரடியாக சென்று மது விற்பனை செய்வதை ஏன் பரிசீலிக்கக் கூடாது? என்று மாநில அரக்கு கேள்வி எழுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை குறித்த தகவல் அறிக்கையை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page