திடீரென சுவை, வாசனை இழப்போருக்கும் கொரோனா பரிசோதனை – மத்திய அரசு பரிசீலனை

Spread the love

திடீரென சுவை, வாசனை இழப்போரையும், கொரோனா தொற்றுக்கான பரிசோதனை வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை யார், யாருக்கு செய்யப்பட வேண்டும் என்பது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மே மாதம் 18-ந் தேதி வெளியிட்டது. அது வருமாறு:-

* காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஊருக்கு திரும்பி வந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 7 நாட்களுக்குள் பரிசோதனை செய்ய வேண்டும்.

* காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

* கட்டுப்பாட்டு மண்டலங்களில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

* அறிகுறிகள் அற்ற நேரடி மற்றும் உறுதி செய்யப்பட்டவர்களின் உயர் ஆபத்து தொடர்பில் இருந்தவர்களை பரிசோதிக்க வேண்டும். இவர்கள் தொடர்பில் வந்த 5-10 நாளில் பரிசோதிக்க வேண்டும்.

* கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்டுகள் மற்றும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள், கடுமையான சுவாச தொற்று நோயாளிகள், அறிகுறி உடைய சுகாதார ஊழியர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு பணிக்குழு கூட்டம் நடந்தது. இதில் தற்போது கொரோனா பாதிப்புக்கு ஆளாகிற பலரும், திடீரென தாங்கள் சுவையையும், வாசனையையும் இழந்ததாக குறிப்பிட்டது பற்றி விவாதிக்கப்பட்டது.

இந்த அறிகுறி உடையவர்களையும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் இதில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இருப்பினும் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

இதற்கிடையே வல்லுனர் ஒருவர் இதுபற்றி கூறுகையில், “கொரோனாவுக்கான குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் இல்லை என்றாலும், காய்ச்சல் வருகிறபோது, வாசனை, சுவை இழப்பால் பாதிக்கப்படலாம். இது நோய் தொடங்கியதற்காக ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக கண்டறிவது, சீக்கிரமாக சிகிச்சையை தொடங்குவதற்கு உதவியாக இருக்கும்” என கூறினார்.

அதே நேரத்தில் அமெரிக்க தேசிய பொது சுகாதார நிறுவனத்தின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், கொரோனா அறிகுறி பட்டியலில் சுவை மற்றும் வாசனை இழப்பை கடந்த மே மாதம் சேர்த்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page